வியாழன், 1 ஜனவரி, 2009

எமனை ஏமாற்றி சுவாஹாதேவியை அக்னி பகவான் அனுபவித்த இன்பக் கதை

அம்மி மிதித்தலும் -
அருந்ததி பார்த்தலும் -
திவசம்கொடுத்தலும் - அர்த்தம் புரியாத வடமொழி மந்திரங்களும்!


அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் காலமாகி விட்டார் என்ற செய்தியை இந்து ஏடு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

அக்னிஹோத்திரம் 102 வயது வரையில் வாழ்ந்தவர்.அவரது 100ஆவது வயது வரையில் - அவரது சொந்தச் சாதியினர், அவர் வேதங்கள் அனைத்தையும் பயின்ற விற்பன்னர் என்றும், காஞ்சி மகாப் பெரியவாளின் வலதுகரமாக, ஆலோசகராகச் செயல்பட்டவர் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கருடன் அமர்ந்து மத சுதந்திரத்திற்கான விதிகளை அரசியல் சட்டத்தில் உருவாக்கியவர் என்றும் ஓகோ, ஓகோ என்று புகழ்ந்து உச்சி மீது வைத்து மெச்சிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவரது 100ஆவது வயதில் அவர் நக்கீரன் இதழில் இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதி - இந்து மதத்தின் பேரால் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பரப்பிடும் மூடநம்பிக்கைகளையும், ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் அவர்களை ஆழ்த்தவும், அவமதிக்கவுமான காரியங்களைக் கண்டித்து - அவர்களின் பாரபட்சமான - ஓர வஞ்சனையான செயல்களை அம்பலப்படுத்தினார். அவற்றிற்கு ஆதாரமாக - வேதங்களையே சுட்டிக் காட்டினார்.இது அவரது சொந்த சாதியினரை ஆத்திரப்பட வைத்தது. அவர்கள் அக்னிஹோத்திரத்தை சந்தித்து அந்தத் தொடர் பிராம்மண விரோதம் என்று கண்டித்தார்கள். உடனே அதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று வேண்டினார்கள். நிறுத்தா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டினார்கள்.

அவர்களது இச்சகப் பேச்சுக்களுக்கோ, அச்சுறுத்தலுக்கோ - எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்தார் அக்னிஹோத்திரம். தொடர்ந்து எழுதினார்; இந்து மதத்தின் பேரால் நடத்தப்படும் அக்கிரமங்களை - அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். போதாக் குறைக்கு அந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை சடங்குகளின் கதை என்ற தலைப்பில் எழுதி - புரோகிதர்கள் ஓதும் கல்யாண மந்திரங்கள் - கருமாதி மந்திரங்கள் எல்லாம் எவ்வளவு ஆபாசமானவை, முட்டாள்தனமானவை - பணம் பறிக்க நடத்தும் தந்திரங்கள் என்பதையெல்லாம் அம்பலப்படுத்தினார்.அவரது எழுத்தில் மடமையைச் சாடும் உத்வேகம் இருந்தது, பகுத்தறிவின் ஒளி துலங்கியது!தந்தை பெரியார் அவர்கள் புரோகிதம் ஒழிந்த திருமணங்களை - சுயமரியாதைத் திருமணங்களை வலியுறுத்தியது எவ்வளவு சரியானது என்பதை - சொல்லாமல் சொல்வது போல திருமணச் சடங்குகளை சாடி எழுதினார்.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்று அழைப்பிதழில் போடுகிறீர்களே - அதற்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

விவாகம் என்ற சொல்லுக்கு மணப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு (கடத்திக் கொண்டு) ஓடிப்போவது என்று அர்த்தம் என்று ஆணி அறைந்தது போல சனாதனிகளுக்கு சவுக்கடி கொடுத்தார் அவர்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்துதிருமணம் நடத்துவதின் பின்னணியில் - அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் ஓதும் மந்திரங்களில் எவ்வளவு ஆபாசம் - அநாகரிகம் - மடமை பொதிந்து கிடக்கிறது என்பதை அந்த மந்திரங்களை எழுதி அவற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைப் புட்டுப்புட்டு வைத்தார்.-

அம்மி மிதிப்பது; அருந்ததி பார்ப்பது திவசம் செய்வதுபோன்ற மூடநம்பிக்கைகள் பற்றி அவர் தமது சடங்குகளின் கதையில் விளக்கியிருப்பதை மட்டும் படித்தாலே போதும்.உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம் - என்ற முகமனோடு அவர் எழுதியுள்ளவற்றின் ஒரு பகுதி வருமாறு:-


அம்மி மிதிப்பது!

அதாவது பெண்ணை நடை நடையாய் அழைத்து வந்து அம்மியொன்று மீது ஏறி நிற்க வைப்பார்கள். உடனே புரோகிதர்

ஆதிஷ்ட இமம் ஆஸ்மானம்
அஸ்மே வத்வம் ஸ்திராபவா...

நீ எப்போதும் உன் குடும்பத்தை இந்த கல்லைப் போல ஸ்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது சந்தேகப்பட்டு குடும்பம் என்ற கட்டமைப்பு உடைந்து போகாமல் இந்த கல்லைப் போல குடும்பத்தை கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இதன் பின்னணி மலைவாழ் பழங்குடியினரிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது.அதாவது மலைப் பழங்குடியின மக்கள் ஒவ்வொரு செய்கையின் போதும் ஒரு கல்லின் மீது ஏறி நின்று இந்த கல்லைப் போல உறுதியாக இக்காரியத்தில் இறங்குகிறேன்.... என சங்கல்பம் எடுத்துக் கொள்வார்கள்.
இதை கவனித்து பிராமணர்கள்... அந்தக் கல்லை தூக்கி கல்யாணத்தில் போட்டார்கள்.மலை மக்களான (கூசயெடள)-ன் வழக்கத்தை... கல்யாணத்துக்கு கொண்டு வந்து விட்டாயிற்று. செங்கல்லை மிதித்தால்... வாழ்க்கையும் செங்கல் போலவே உடையலாம்.அதனால் கருங்கல் தேர்ந் தெடுக்கப்பட்டது. அதுவும் வீடுகளில் கருங்கல்லுக்கு எங்கே போவது... அதனால் அம்மியைக் கொண்டு வரச் சொன்னார்கள்.சட்னி அரைப்பது, குழம்புக்கு உண்டான மசாலா அரைப்பது இவற்றுக்காக பயன்பட்டு வந்த அம்மியைப் பயன்படுத்தி - பிராமணர்கள் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள். அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதுதான் அம்மி மிதிப்பது என்ற சடங்கின் தோற்றம். அதாவது கல்லை மிதிப்பதுதான் இச்சடங்கின் கருத்துரு.ஆனால்... வீடுகளில் கிடைக்கும் கல் அம்மி என்பதால் அம்மி மிதித்தல் ஒரு சடங்காகிவிட்டது.

அம்மி மிதிக்கும்போது அவளது பாதாதி அரவிந்தங்களில் பணிந்து... பூக்காம்புகள் சற்றே பருத்ததைப்போல அமைந்த அவளது கால் விரல்களை தன் உள்ளங்கையால் வருடியபடியே பெருவிரலுக்கு பக்கத்து விரலில் மெட்டியை மாட்டுகிறான் மணமகன்.அப்போது... கல்யாணம் நடத்தி வைக்கும் வாத்யார்... மாப்பிள்ளையைப் பார்த்து, நிமிர்ந்து மேல பாருங்கோ... அருந்ததி பாருங்கோ... என மேல் நோக்கி கை காட்டுகிறார்.பையனும் பேந்த பேந்த மேலே பார்க்கிறான். என்ன அருந்ததி நட்சத்திரம் தெரியுறதா? என கேட்கிறார் வாத்யார். ம்... தெரியுதே... என்கிறான் பையன்.


அதாகப்பட்டது முகூர்த்தம் 5-5.30 ஆக இருக்கலாம். 6-6.30 ஆக இருக்கலாம். ஏன் 9-9.45 ஆக கூட இருக்கலாம். இப்பேர்ப்பட்ட சுபயோக சுப காலை வேளையில்... சாதாரண நட்சத்திரமே தெரியாது. பிறகு எப்படி அருந்ததி நட்சத்திரம் தெரியும்?நான் கலந்துகொண்ட கல்யாணம் ஒன்றில் பையன் இது போலத்தான் அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது என சொல்லி விட்டான்.நான்... கொஞ்ச நேரம் கழித்து ஏண்டாப் பயலே... உன் கல்யாண முகூர்த்தம் - 7.30-8.15 விடிந்து 2 மணி நேரத்துக்கும் மேலே ஆகிவிட்டது. சூரியன் வானத்தில் சூப்பராய் ஜொலிக் கிறான்.இப்பேர்ப்பட்ட நேரத்தில் உனக்கு அருந்ததி நட்சத்திரம் எங்கே தெரிந்தது? எனக்கும் கொஞ்சம் காட்டேன் - எனக் கேட்டேன்.அவன்... பதறிப்போய் வாத்யார் தெரியுதுனு சொல்லச் சொன்னார். சொன்னேன் என்றான்.

இவனைப் போல பல மாப்பிள்ளைகள் மந்திரம் ஓதும் புரோகிதர்களின் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.சரி அருந்ததி யார்? உங்களுக்குத் தெரியுமா?சூரிய வம்சத்து மன்னர் பரம்பரை திலிபன், ரகு, அஜன், தசரதன், ராமன் - என புகழ்பெற்றது.

பெரும்புகழ் படைத்த சூரியவம்ச மன்னர் குலத்தின் ராஜகுருவானவர் வசிஷ்டர்.இவரது மனைவிதான் அருந்ததி. இரண்டு பேரும் கணவன் - மனைவி என்றால் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்களாம்.

கற்புக்கரசிக்கு தமிழர்களாகிய நாம் கண்ணகியை காட்டுவதைப் போல... வடக்கத்தியர்கள் காட்டுவதுதான் அருந்ததி. ஆனால்... நாமோ கல்யாணத்தன்று கண்ணகியை மறந்துவிட்டு அருந்ததியைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அருந்ததி - கற்புக்கரசி என்பதற்கான ஒரு கதையும் இருக்கிறது.அதாவது அருந்ததி கற்பு நிரம்பியவள் என்பதற்காக இந்தக் கதை கட்டப்பட்டது. தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும். இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி.

இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன. பார்த்தான் எமதர்மன். இவளை விட்டால் தனது அழகு என்னும் அஸ்திரத்தால் என்னையே கொன்று விடுவாள் போல, என மயங்கினான். சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன்.அதற்காக திட்டம் போட்டான். சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான். தேவைப்படும் போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டனர். மோகப் போரின் முடிவில் எமனுக்கு பயங்கர களைப்பு. என்ன செய்தான்? அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். அப்போது அந்த வழியே அக்னிதேவன் நடந்து வர அவனைப் பார்த்துவிட்டாள்.

ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும் என அழைத்து அவனை அணைத்து தழுவி தன் ஆவலை தீர்த்துக் கொண்டாள் சுவாஹாதேவி.

சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள் சுவாஹா. இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம் என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.டக்கென அவளை ஓர் எலுமிச்சை பழமாக்கி முழுங்கினான் எமன். சரி இதில் அருந்ததி எங்கே வந்தாள் என கேட்கிறீர்களா?... பொறுமை பொறுமை...அருந்ததியைப் பற்றி சொல்ல வந்துவிட்டு சுவாஹா என்பவளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறாரே?... என்னடா இவர் என நினைகிறீர்கள்தானே.அப்படி அல்ல... அருந்ததியின் கற்புசக்தியை நிலைநாட்டத் தான் சுவாஹாதேவி கதையே சொல்லப்பட்டிருக்கிறது.

என்ன பார்த்தோம்?...

எமன், சுவாஹாதேவியை அனுபவித்த களைப்போடு நந்த வனத்தில் தூங்கிப் போனான். அந்த நேரம் சுவாஹாதேவி அக்னி தேவனை தரிசிக்க மோகித்தாள் - அக்னியோடு போகித்தாள்.எமன் விழிப்பதற்குள் அக்னியும் சுவாஹாதேவியும் ஆசை யோடு ஆலிங்கணம் செய்து முத்தத்தால் பரஸ்பர அபிஷேகம் செய்துகொண்டு - அந்த நந்தவன மெத்தையிலே மன்மத நர்த்தனமாடினர்.
எமன் தூங்கும்போது இவர்களின் இளமை விழித்துக் கொண்டு விளையாடிக் களித்தது.எமன் விழித்ததும்... ஒன்றுமறியாதது போல் சுவாஹாதேவி... அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி தனக்குள் விழுங்கி விட்டது வரையில் பார்த்தோம்.எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியோ அக்னியை எலுமிச்சைப் பழமாக்கி ஏற்கனவே விழுங்கிவிட்டாள். அப்படிப்பட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கிவிட்டான்.இதனால் என்ன ஆனது?.... அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை.

அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?
விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.
எமன் அசந்த வேளையில்...
சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு.
இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு.எனவே எமனை அழைத்து... உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்.அப்படியே செய்தான்.வெளியே வந்த சுவாஹாதேவியிடம் உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு என்றார் விஷ்ணு. சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர்.

ஆனால்... சுவாஹாதேவியை அவள் இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும் அடங்கவில்லை.அழகுப் பதுமையாய் சதைச்சிற்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க... அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு குஷியாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டான்.இதை தனது மனைவியான சுவாஹாதேவியிடமே சொன்னான்.அடியேய்... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகிவிட்டது. சப்தரிஷி மண்டலத்தில் என்றும் இளமையாக இருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு தேக ஆனந்தம் கொள்ள துடிக்கிறேன் என்றான். நான் இருக்க ஏண்டா அவள்களுக்கெல்லாம் ஆசைப்படு கிறாய் என்றல்லவா சுவாஹா கேட்டிருக்கவேண்டும்? கேட்டாளா?...
இல்லை.
பிறகு?... அப்படியே ஆகட்டும்... ஆனால் ஒன்று அந்த ரிஷிகளின் மனைவிகள் போல நானே உருவம் எடுத்து வருகிறேன். நீ அனுபவித்துக் கொள் என்று யோசனை சொன்னாள் சுவாஹா.சப்த ரிஷிகள் என்றால் ஏழுபேர். இவர்களில் ஒவ்வொரு ரிஷியின் மனைவியரை போலவும் உருவெடுத்து சுவாஹாதேவி வர... அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி. இன்னும் ஒருத்தி பாக்கியிருக்கிறாள். அவள்தான் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

ஆறு ரிஷிகளின் மனைவிகளையும் அனுபவித்தவன், அடுத்து கடைசியாக அருந்ததியை அனுபவிக்க தயாராக இருந்தான்.சுவாஹாதேவி தனது சக்தியால் அருந்ததி போல உருவம் எடுக்க முயற்சித்தாள். ம்ஹூம். முடியவில்லை. என்னென்னமோ செய்தாள். ஆனாலும் அருந்ததி போல் அவளால் உருவெடுக்க முடியவில்லை. ஏனென்றால்... அருந்ததி கற்புக்கு அரசி.இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி, அருந்ததியை பார்த்தபடி... தேவி... நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக. இனி... அக்னி முன்னிலையில் நிகழும் ஒவ்வொரு கல்யாணத்திலும்... உன்னைப் பார்த்து வணங்கினால் அந்த தம்பதிகள் சுகம், தனம், புத்திரர்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று கூறினாளாம்.அதன்படிதான்... இன்னும் கல்யாணத்தின் போது அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறார்கள்.

அது காலை மணி 9-9.45 சூரியதேவன் எரியும் நேரமாக இருக்கும்போதும் அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறீர்களே எப்படி?...
உங்கள் மனைவியைவிட அருந்ததிக்கு கற்பு அதிகம் என நீங்கள் நம்புகிறீர்களா?...
அம்மி மிதித்தாயிற்று.
அருந்ததி யாரென்று பார்த்தாயிற்று.
அடுத்து?...
சரி...

இப்போது ஒரு மகன் தன் அம்மாவை இழந்து தவிக்கிறான். தனக்கு பால் ஊட்டியவருக்கே... பால் ஊற்றும் நிலைமைக்கு வந்துவிட்டோமே என கண்கள் அழுது அழுது பெருகுகிறது.இதயம் உடைந்து அம்மா அம்மா என கதறுகிறது. எல்லாருக்குமே வாழ்க்கை என்பது அவர்களின் அம்மா போட்ட பிச்சை. அம்மாவின் புடவையில் கட்டிய தூளியின் கட்டில்தான் சின்னக் குழந்தையில் நாம் தூங்கியிருப்போம்.நாம் வளர வளர அதைப் பார்த்து மலர்கிறவள் தாய் மட்டும்தான்.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைசான்றோன் எனக்கேட்ட தாய்...என வள்ளுவரே தாய்மையின் உயர்வை... மகனை வைத்துச் சொல்கிறார்.தாய்தான் உலகத்தின் ஆதாரம். பெருமாளின் மனைவியைக் கூட தாயார், தாயார்... என மரியாதையாக அழைப்பவர்கள் நாம். அப்படிப்பட்டவள் தாய். இன்றும் பூமியில் எக்கச்சக்க அழுக்குகள் இருந்தாலும்... ஒவ்வொரு தாய் உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் புனிதமாகிக் கொண்டே வருகிறது பூமி.அப்பேர்ப்பட்ட தாயை இழப்பதே எவ்வளவு பெரிய துன்பம்? அந்தத் துன்பத்தை தணித்துக் கொள்வதற்காக... தாய்க்கு திவசம் செய்யப் போகிறான் ஒரு பாமரன்.அப்போது புரோகிதன் சொல்கிறான்

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம...

எங்க அம்மா ராத்திரி வேளைகள்ல யார்கிட்ட படுத்துக் கொண்டு என்னைப் பெற்றாளோ தெரியாது. ஆனால்... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன்...என்பதுதான் அந்த மந்த்ரத்தின் அர்த்தம். உன் தாயை உன் கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான்... அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்த்ரத்தின் நோக்கம்.

இப்படிப்பட்டதுதான் இறுதிச் சடங்கு.
நேருஜி இறந்தபோது கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா?..., தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ... என்று கேட்டான்.
அதே போல அம்மாக்களை இழிவுபடுத்தும் இறுதிச் சடங்கே உனக்கொரு நாள் இறுதிச்சடங்கு செய்ய மாட்டோமா?... - என்று எழுதியிருக்கிறார் என்பதைவிட உள்ளம் குமுறி மூடநம்பிக்கை களுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார் அக்னிஹோத்திரம்!

அதனால்தான் அவர்மீது - கோபம். அவரது மறைவு பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருட்டடிப்பு!அவரது 100ஆவது வயது வரையில் - அவரை

சுருதி ஸ்மிருதி இதிஹாஸ
புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்
வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸபதி
மஹோ பாத்யாயமகா மஹோ பாத்யாய
அக்னிஹோத்திரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்

என்று நீட்டி மூழக்கி போற்றிப் புகழ்ந்தார்கள். இந்துமத சடங்குகளையும் அதில் அடங்கியுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் அம்பலப்படுத்தியதால் இப்போது அவர் நினைவே அவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.சூட்சுமம் புரிகிறதா?


-------------- நன்றி:- சின்னக்குத்தூசி - "முரசொலி" (1.1.2009)

http://thamizhoviya.blogspot.com/2009/01/blog-post_2594.html


நன்றி

1 comments:

RAMYA சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Prabu

கருத்துரையிடுக