வியாழன், 22 ஜனவரி, 2009

"புறநானூற்றுத் தாய்"

பழைய கள், வேறு மொந்தையில்!
பொதுவா "புறநானூற்றுத் தாய்" ன்னு குறிப்பிட்டு பேசுறதை கேள்விப்பட்டு இருப்பீங்க. அது ஏன் அப்படிக் குறிப்பிட்டு பேசுறாங்க? அதுல என்ன சிறப்பு? இந்தக் கேள்வியை என்னோட சிநேகிதன்கிட்ட கேட்டேன்? அவரு பொதுவா, எதோ சொல்லி சமாளிச்சாரு. ஆகவே, இதைப்பத்தி எனக்குத் தெரிஞ்சதை பதியலாம்னு நினைக்கவே இந்தப் பதிவு.புறநானூறு சங்ககாலத்துல ஒன்றுக்கு மேற்ப்பட்ட புலவர்களால எழுதப்பட்டதுன்னு சொல்லுறாங்க. அதுல பதினாறு பேர் பெண்கள்ன்னும் சொல்லுறாங்க. குறிப்பா ஔவையார், காக்கைபாடினியார், வெள்ளி வீதியார், நல்முல்லையார் இவங்க எல்லாம் முக்கியமானவங்க. அடுத்தது அகநானூறு. இதுவும் அப்படித்தான் பல புலவர்களால எழுதப்பட்டது. அகநானூறு அகத்திணையில எழுதப்பட்டது. அப்படின்னா? அது வந்துங்க ஓர் ஆணும் பெண்ணும் சேந்து இன்ப துனபங்களை அனுபவிக்கிறாங்க பாருங்க. அது அக வாழ்வு. அல்லது வீட்ல, குடும்பத்துல, காதலன், காதலி இவங்களுக்குள்ள நடக்குறதுன்னும் வெச்சுக்கலாம். இது சம்பந்தமா எழுதினது அகநானூறு. இந்த போர், அரசியல், சாணக்கியத்தனம் இதெல்லாம் பொது வாழ்வு அல்லது புறவாழ்வுன்னு சொல்லாம் இல்லீங்களா? இதைத்தான் புறத்திணைன்னு சொல்லுறாங்க. இந்த புறத்திணை சார்ந்து எழுதினது புறநானூறு. சரி இந்த அகநானூறு, புறநானூறு யாரெல்லாம் எழுதினாங்க? அதுக்கு நீங்க, எம்மோட முந்தைய பதிவப்பாத்து தெரிஞ்சுக்குங்க.சரி, இப்ப இந்த பின்னணியோட நம்ம தலைப்பு சம்பந்தப்பட்ட விசயத்துக்கு வருவோம். போர்க்காலங்கள்ல, அரசியல்ல, சங்ககாலத்துப் பெண்கள் எப்படியெல்லாம் இருந்தாங்கன்னு நிறைய விசயங்களை ஔவையார், காக்கைப் பாடினியார் இப்படி நெறையப் பேர் எழுதி இருக்காங்க. அதுல தாயானவளின் பங்கு, அவங்க கிட்ட இருந்த வீரம், இதைப்பத்தியெல்லாம் நொம்ப முக்கியமா சொல்லப்பட்டு இருக்குங்க. அதுல நாம இப்ப பாக்கப் போறது போர்க்களத்துல மகனைப் பறி குடுத்த தாய்.தன்னுடைய நாட்டுக்கும் எதிரி நாட்டுக்கும் போர் மூளுது. போர்ல தன்னைப் பெற்ற தந்தை, உற்ற சகோதரன், கொண்ட கணவன் இப்படி தன்னைச் சார்ந்த ஆண்கள் எல்லாம் மார்பில் விழுப்புண் வாங்கி வீர மரணம் அடைஞ்சுபோன சேதியோட, போருக்குப் போய்ட்டு திரும்பின ஊரு சனங்க எல்லாம் அந்த அந்தி சாயுங்காலம் ஊருக்குள்ள வர்றாங்க. ஆனாலும் சேதி கேட்டு, ஆண் பிள்ளையப் பெத்த இந்தத் தாய் இடிஞ்சு போயிடலை. "எனக்கு இன்னும் நான் பெத்த புள்ளை இருக்கான். நாளைக்கு, என்னோட வீட்டு முறைக்கு ஆள் அனுப்ப நான் சிங்கம் மாதிரி புள்ளய பெத்து வளர்த்து வெச்சு இருக்கேன்"னு சொல்லி பெருமைப்பட்டுகிட்டா அந்த தமிழின வீரத்தாய்."தன்னோட நாடு எதிரி நாட்டுப் படைங்க கிட்ட மண்டி போடுவதா? ஒருக்காலும் அது நடக்காது"ன்னு வீராவேசம் கொண்டு, மகன்கிட்ட தன்னோட நாடு, சிறப்பு, அருமை பெருமைகள்னு நாலையும் எடுத்துச் சொல்லி, பாலும் பழமும் அறுசுவை உணவும் ஊட்டி நித்திரை கொள்ளச் செய்யுறா அந்தத் தாய். அப்புறம், கோழி கூப்பிட, கிழக்கு வெளுக்கவே, எழுந்து, தானும் குளிச்சு, தன்னோட மகனையும் எழுப்பி, குளிக்க வெச்சு, அவனுக்கு வெற்றித் திலகம் வெச்சு, நல்ல வெள்ளை உடுப்பு போட்டுவிட்டு, "போய் வா மகனே! வென்று வா!!"ன்னு சொல்லி, ஊரு சனத்தோட சனமா, தன்னோட பிள்ளயயும் வேலோட அனுப்பி வெச்சுட்டு, "தன்னோட வீட்ல இருந்தும் நாட்டோட பெருமையை நிலை நாட்ட இன்னைக்கு ஆள் போயிருக்கு" ன்னு நெனைச்சு பெருமையோட நிம்மதிப் பெருமூச்சு விட்டா அந்தத் தாய். அப்புறம் அந்த நிம்மதியில அசந்து தூங்குறா.தூங்கி எழுந்து போருக்குப் போன சனங்களை எதிர் நோக்கி, ஊர்த் தலைவாசல்ல ஊர் சனங்களோட, இந்த வீரத்தாயும் காத்துக்கிட்டு இருக்குறா. மாலைக் கருக்கலோட, போருக்குப் போன சனங்களும் திரும்பி வர்றாங்க. வந்த சனங்க, "உன்னோட மகன் புறமுதுகு காமிச்சு போர்ல செத்துப் போய்ட்டான்"னு சொல்லுறாங்க. செத்துப் போன மகனை நினைச்சு ஒரு வருத்தமும் படலை இந்த வீர மகராசி. மாறா, "என்ன, என் மகன் புறமுதுகு காண்பித்து மறப்போரில் மாய்ந்து போனானா? ஒருக்காலும் இருக்காது! அப்படி ஒரு வேளை, அவன் புறமுதுகு காண்பித்து இறந்து இருப்பான் ஆயின், அவன் உண்டு வளர்ந்த என் மார்பகங்களை அறுத்து எறிவேன்!" ன்னு சொல்லி எரிமலையா கொதிச்சு ஆவேசப்படுறா. கண்ணு ரெண்டும் சிவந்து கனலா கக்குது.அதே வேகத்துல வீட்டுக்குப் போய் கூரையில செருகி வெச்சு இருந்த வாளை உருவி கையில எடுத்துட்டு போர்க்களத்துக்குப் போறா. போன இடத்துல ரெண்டு நாட்டு வீரர்களோட உடல்களும் அங்கங்க, அங்கங்க, நாலா புறமும் சிதறிக் கெடக்குது. கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்க ஒவ்வொரு உடலையும் தன்கிட்ட இருந்த அந்த வாளால புரட்டி புரட்டி "இது தன்னோட மகனா?" ன்னு பாத்துக்கிட்டே போறா. நேரம் ஆக, ஆக, ஆத்திரமும் கோபமும் அதிகமாகுதே ஒழிய, கொறஞ்ச பாடில்லை. இப்படியே புரட்டிப் பாத்துக்கிட்டு போகும்போது, சலிப்புல வேண்டா வெறுப்பா ஒரு உடலை அந்த வாளால புரட்டுறா. அந்த ஒரு நொடி.... அவளோட முகம் அப்படியே உருமாறுது. கவுந்து இருந்த கருமுகில் விலக, சடார்னு அடிக்கிற அந்த சூரியன் மாதிரி அவ மொகம் அப்படியே பிரகாசிக்குது. கீழ குனிஞ்சு அப்படியே அந்த நெஞ்சுல குத்துப்பட்ட குழந்தைய அள்ளி மடியில போட்டுக்கிட்டு சொல்லுறா, "இந்த வீரஞ்ச் செறிந்த மண்ணில், புலிக்குப் பூனையா? என் பிள்ளையின் உடல் எதிரிகளின் பல உடல்களைத் தாண்டி ஊடுருவி வந்து இங்கே மார்பில் விழுப்புண்னுடன் மாய்ந்து கிடக்கிறதே?! அப்படியானால் என் மகன் பல எதிரிகளை காவு வாங்கிய வீரன் இல்லையா? வீரன் இல்லையா??"ன்னு சொல்லி மகன் மறைஞ்சு போனாலும் கூட, தன் மகன் புறமுதுகு காட்டலைங்குற மகிழ்ச்சியில ஆரவாரம் போடுறா!


ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!! இதைத்தான் புறநானூற்றுக் கவிதைல காக்கைப் பாடினியார் பாடுறாங்க:

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,
“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்" எனச் சினைஇக்,
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

http://maniyinpakkam.blogspot.com/

thank you

0 comments:

கருத்துரையிடுக